Sunday, March 31, 2013

இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இந்திய அரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி!

Sunday, March 31, 2013
சென்னை::இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த விபுலிகளை இந்திய அரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவப் படங்களை எரித்ததை கண்டித்து காரைக்கால் கடற்கரை சாலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

இலங்கை தமிழர்கள் மீது இந்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிகம் செய்துள்ளது.

 புலிகளை இந்தியஅரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது. ஏனென்றால் இந்நாட்டின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை அவர்கள் படுகொலை செய்துள்ளார்கள். அவரை நாங்கள் இளம் வயதிலேயே இழந்துள்ளோம். அதனால்தான்  புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்துள்ளோம்.

ஜெயலலிதா அம்மையார்,  புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டவர். ஆனால்  புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றவர்கள் எல்லாம் இப்பொழுது அதனை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி முதல் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் வரை நிறைய செய்துள்ளார்கள். இலங்கையில்  புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக ராஜீவ்காந்திதான் கப்பல் மூலம் உணவுப் பொருட்களையும், விமானம் மூலம் மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். உலகில் வேறு எந்த நாடும் அதுபோன்று செய்யவில்லை.

ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு சோனியாவை பிரதமராக பதவியேற்க சொன்னபோது அதனை வேண்டாம் என்று கூறி, மன்மோகன்சிங்கை பிரதமராக ஆக்கினார்.

ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினிக்கு பொது மன்னிப்பு அளிக்கும்படி பெருந்தன்மையுடன் கூறினார். எங்காவது தனது கணவரை கொலை செய்தவர்களை மன்னித்து விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி தனது மகள் பிரியங்காவையும் அனுப்பி நளினியை பார்த்து பேசச் செய்தார். புதுச்சேரியில் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவப்படத்தை எரித்தவர்களே, உலகப் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தையும் தாக்கி உள்ளனர்.

அது அரசியல் கட்சி அலுவலகம் அல்ல. எனவே அந்த ஆசிரமம் மீது நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத முதலமைச்சர் என்று சர்வதேச அளவில் முதலமைச்சருக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்திய அரசு ரூ.2550 கோடி நிதியுதவி அளித்தது. அதனை காங்கிரஸ் அரசுதான் தந்ததே தவிர, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, சீமானோ, முண்டாசு கட்டிய வைகோவோ தரவில்லை.

இலங்கை தமிழர்களின் பெயரை சொல்லிக் கொண்டு வெளிநாடுகளில் வசூல் செய்யும் கட்சிகளும் இங்கு உள்ளன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து உங்கள் இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்றும் தமிழர்களுக்கு அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் தர வேண்டும் என்றும் நாங்கள்தான் கூறினோம்.

காங்கிரஸ் கட்சி மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்பதற்காக 2014-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பலர் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது போன்று மக்களை திசை திருப்பி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.

No comments:

Post a Comment