Wednesday, March 20, 2013
புதுடில்லி:::இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும்,'' என, கருத்து தெரிவித்துள்ள, காங்., தலைவர் சோனியா, ""ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொண்டது குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை,'' என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், தி.மு.க., கொடுத்த நெருக்கடி, ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு, இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரம், மத்திய அமைச்சர், பெனி பிரசாத் வர்மாவின் சர்மாவின் சர்ச்சை பேச்சு, உள்ளிட்ட பல விவகாரங்களால், காங்கிரசுக்கும், காங்., தலைமையிலான, மத்திய அரசுக்கும், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, காங்., கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. காங்., துணை தலைவராக, ராகுல் பதவியேற்ற பின் நடக்கும், முதல் எம்.பி.,க்கள் கூட்டம் என்பதாலும், இந்த கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில், காங்., தலைவர், சோனியா, விரிவான உரை நிகழ்த்தினார். அவரது பேச்சில், பல்வேறு விஷயங்களை பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும், இலங்கை தமிழர் விவகாரத்துக்கு, முக்கியத்துவம் அளித்து, அவர் பேசினார்.
அவர் பேசியதாவது: இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, நியாயமான அரசியல் உரிமைகள், தொடர்ந்து மறுக்கப்படுவது, எனக்கு, வேதனையையும், அதிக கவலையையும் அளிக்கிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, சம உரிமை மற்றும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே, காங்கிரசின் நிலைப்பாடு. முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் ஆகியோரின் காலத்திலிருந்தே, இதை வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பாக, இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள், மிகவும் கவலையை அளிக்கின்றன.
மீனவர் விவகாரம்: இதன்காரணமாகவே, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றதாக அறிவித்திருப்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், மிகவும் கவலைக்குரிய விஷயம். தினம் தோறும் நடக்கும், இந்த அவலத்துக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.
தேர்தலை சந்திக்க: நம்மை, தரக் குறைவான வார்த்தைகளால், விமர்சனம் செய்வதோடு, பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில், தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஊழலை ஒழிப்பதற்காக, காங்., தொடர்ந்து போராடும். லோக்பால் மசோதாவை, விரைவில் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யப்படும். காஷ்மீர் மற்றும் ஐதராபாத்தில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன. இவ்வாறு, சோனியா பேசினார்.
இத்தாலிக்கு பதிலடி: காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில், ""இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்களை, விசாரணைக்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என, இத்தாலி அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது. இது, முறையற்ற செயல். எந்த ஒரு நாடும், இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில், இந்தியாவுக்கு, இத்தாலி அரசு துரோகம் செய்து விட்டது,'' என்றார்.
பெனி பிரசாத் "ஆப்சென்ட்': காங்., - எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான, பெனி பிரசாத் வர்மா, "சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது' என, கூறியிருந்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெனி பிரசாத்தின் கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதனால், நேற்று நடந்த, காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், பெனி பிரசாத் வர்மா, பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பெனி பிரசாத் கூறியதாவது: என்னைப் பற்றி, சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். என் வாழ் நாள் முழுவதும், காங்கிரஸ் கட்சியில் தான் தொடருவேன். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டேன். காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பேன். இவ்வாறு, பெனி பிரசாத் வர்மா கூறினார்.

No comments:
Post a Comment