Wednesday, March 20, 2013

பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் இந்தியாவில் இருந்து இலங்கை வருவோருக்கு நாம் மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிகளை போதிக்க நேரிடும் - பியசிறி விஜயநாயக்க எச்சரிக்கை!

Wednesday, March 20, 2013
இலங்கை::பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் இந்தியாவில் இருந்து இலங்கை வருவோருக்கு நாம் மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிகளை போதிக்க நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் செயலாளருமான பியசிறி விஜயநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கு யாத்ரீகர்களாக சென்ற இலங்கை பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தாக்குதல் நடத்தியவர்கள் இனந்தெரியாதவர்கள் என்று கூறிவிட்டு மௌனம் காக்கக்கூடாது. இதற்கு இந்திய மத்திய அரசு பதில் கூற தவறினால் இந்தியாவில் இருந்து இலங்கை வருவோருக்கு நாம் மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிகளை போதிக்க நேரிடும்.

இந்தியாவில் தான் புத்த மதம் முதலில் உதயமானது. அங்குள்ள புத்தகாயாவுக்கு பௌத்த மக்கள் செல்வதற்கு உரிமையுள்ளது. இதனை யாரும் மறுக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது.

இந்தியா தென்னாசியாவிலேயே மிகப்பெரிய இராஜ்ஜியம். இந்நிலையில் அது தன்னை சுற்றியுள்ள சிறிய நாடுகளுடன் ஒருமித்து செயற்பட வேண்டும். அதை விடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை போன்ற சிறிய நாடுகளை பகைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

எனவே, பிக்குகள் மீதான தாக்குதல் குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் கூறவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment