Saturday, March 16, 2013
சென்னை::அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும்,'' என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.
இதுகுறித்து, கருணாநிதி நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து, பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்தச் சூழலில், தி.மு.க., வைப் பொறுத்தவரை, இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்கு காரணமான, போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதும் குறித்தும், அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காத வகையில், இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க.,வின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், மத்திய அமைச்சரவையில், இனி மேலும் தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதி பட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.


No comments:
Post a Comment