Thursday, March 21, 2013

2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம் : புதிய வரிகள் எதுவும் இல்லை!

Thursday, March 21, 2013
சென்னை::தமிழக சட்டசபையில் 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு மற்றும் தற்போதுள்ள வரிவிகிதங்களை உயர்த்துவது தேவையில்லை என முதல்வர் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். 17 ஆயிரம் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள். இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும். சென்னையில் 4 பெரிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் என்பதால் எம்எல்ஏக்கள் காலை 9 மணி முதலே சபைக்கு வர தொடங்கினர். முதல்வர் ஜெயலலிதா காலை 10.20க்கு அவைக்கு வந்தார். அவருடன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேசுடன் வந்தார். திமுக எம்எல்ஏக்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.27க்கு வந்தனர். 10 மணிக்கு சபாநாயகர் தனபால் திருக்குறள் சொல்லி அவையை தொடங்கி வைத்தார். பின்னர், பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அழைத்தார். அதைத் தொடர்ந்து, 201314ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 3வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

*காவல் துறைக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட வசதிகளுக்கு ரூ.4706 கோடி ஓதுக்கீடு.

*தேர்வாணையம் மூலம் புதிதாக 17 ஆயிரம் போலீசார் நியமனம்.

*நீதிமன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்வதற்கு ரூ.695.28 கோடி ஒதுக்கீடு.*இந்த ஆண்டு மேலும் 2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.

*கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*விவசாய துறைக்கு ரூ.5189 கோடி ஓதுக்கீடு.

*பயிர் உற்பத்தி திறனை உயர்த்த மேலும் 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி முறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

*கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடன் ரூ.4000 கோடியாக உள்ளது. இது ரூ.4500 கோடியாக உயர்த்தப்படும்.

*இந்த நிதியாண்டு 12 ஆயிரம் கறவை பசுக்கள், 1.5 லட்சம் நிலமற்ற ஏழை பெண்களுக்கு 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

*ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த புதிய மீன்பிடி படகுகள் வாங்க வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

*உணவு மானியத்துக்காக ரூ.4900 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 7 அரிசி ஆலைகளை நவீனப்படுத்த ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*கடலூர் மாவட்டத்தில் மூடசலோடையில் புதிய நவீன மீன் இறங்குதளம் ரூ.7.78 கோடியில் அமைக்கப்படும். ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் துறை பங்கேற்புடன் 2 மீன்பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். இது போன்ற செலவினங்களுக்காக மீன்வள துறைக்கு ரூ.467.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்.

*அரிசி விலையை கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்பு அங்காடிகள் மூலம் 1 லட்சம் டன் அரிசி கிலோ ரூ.20க்கு வெளிச்சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*தோட்டக்கலை துறை மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும்.

*விவசாய பாசனத்துக்காக ரூ.3314.5 கோடி ஒதுக்கீடு.

*பாரம்பரிய நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு.

*அணைகளை புனரமைக்க ரூ.390 கோடி ஒதுக்கீடு.

*3வது நதி இணைப்பு திட்டமான பெண்ணை ஆறு பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

*65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

*சுற்றுச்சூழல் வன பாதுகாப்புக்காக ரூ.880 கோடி ஒதுக்கீடு.

*சிப்காட் நிறுவனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலவங்கி அமைக்கப்படும்.

*தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.

*காதி, சர்வோதய சங்கங்களுக்கு தள்ளுபடி மானியம் ரூ.12 கோடி ஒதுக்கீடு.

*நெடுஞ்சாலை துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.6452.77 கோடி உயர்த்தப்படும்.

*ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.2032 கோடி ஒதுக்கீடு.

*சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்படும்.

*மெட்ரோ ரயிலுக்காக இந்த ஆண்டு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

*சென்னை மாநகரில் ரூ.271.68 கோடி செலவில் 4 பெரும் மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதேபோல, மதுரை காளவாசலிலும், கோரிப்பாளையத்திலும் ரூ.130 கோடி செலவில் 2 மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

*தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

*மாநில போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உயர்மட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும். கூடுதல் எரிபொருள் செலவை ஈடு செய்ய ரூ.500 கோடி நிதி.

*புதிய மின் உற்பத்தி திட்டங்களான எண்ணூர் விரிவாக்க திட்டம், இரண்டு 660 மெகாவாட் அலகுகள் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல, திட்டம், இரண்டு 660 மெகாவாட் அலகுகள் கொண்ட உடன்குடி மின்திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

*இந்த நிதியாண்டில் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த சர்க்கரை ஆலைகளுக்கு குறுகியகால கடன் ரூ.352 கோடி ஒப்புதல் அளிக்கப்படும்.

*அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி கருவிகள் அமைக்க எம்எல்ஏ நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு.

*மின் உற்பத்தி, மின் பகிர்மான நிறுவனத்துக்கு மின்சார மானியம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.12197 கோடி ஒதுக்கீடு.

*தேர்வு செய்யப்பட்டுள்ள சுற்றுலா மையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.67.91 கோடி ஒதுக்கீடு

*தமிழ்நாட்டுக்கு செல்வோம் 2014’ என்ற விளம்பர பணிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

*மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் சர்வதேச கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்கப்படும்.

*பிறப்பு இறப்பு பதிவு, தடுப்பூசி, பேறுகால வசதி திட்டங்களுக்கு ரூ.6511.76 கோடி ஒதுக்கீடு.

*முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஓதுக்கீடு.

*தஞ்சை, நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மேலும் 2 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

*மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் ரூ.20 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

*பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.16,965.30 கோடி ஒதுக்கீடு. கூடுதல் வகுப்பறைகள், கட்டமைப்புகள் போன்ற மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1684 கோடி ஒதுக்கீடு. 2731 பள்ளிகளுக்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்படும்.

*5.6 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.1500 கோடி ஒதுக்கீடு.

*தூய்மை பாரதம் திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ.97 கோடி ஒதுக்கீடு.

*60 ஆயிரம் பசுமை வீடுகள் அமைக்கப்படும்.

*இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.132ல் இருந்து ரூ.148 ஆக உயர்த்தப்படும்.

*281 பேரூராட்சிகளில் 425.92 கி.மீ. சாலைகள் ரூ.103 கோடியில் மேம்படுத்தப்படும்.

றீஎஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.56.34 கோடி ஒதுக்கீடு.

*திருமண உதவி திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.750 கோடி, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.105 கோடி, பெண் குழந்தைக்கான சிறப்பு நிதி உதவி ரூ.34.26 கோடி ஒதுக்கீடு.

*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

*14,130 மதிய உணவு மையங்களில் ரூ.359.7 கோடி செலவில் கட்டுமான பணிகள் செயல்படுத்தப்படும்.

*ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1320.5 கோடி ஒதுக்கீடு.

*முதியோர் பென்ஷன், ஆதரவற்ற விதவைகள் பென்ஷன் திட்டங்களுக்கு ரூ.3461.75 கோடி ஒதுக்கீடு.

*மாற்று திறனாளிகள் நலனுக்காக ரூ.263 கோடி ஒதுக்கீடு.

*இலங்கை அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் அகதிகளுக்கும் முதல்வரின் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன் அளிக்கப்படும்.

*வக்கீல்கள் சேமநலநிதிக்காக ரூ.4 கோடி மானியம்.

புதிய வரி எதுவும் இல்லை

இந்த வரவு செலவு திட்டத்தில் புதிய வரிவிதிப்போ, நடைமுறையில் உள்ள வரிவிகிதத்தினை உயர்த்துவதோ தேவையில்லை என்று முதல்வர் முடிவு செய்துள்ளார்’’ என்றும் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது மேலும் பல அறிவிப்புகளும் திட்டங்களும் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா சென்னையில் 4 பெரிய மேம்பாலங்கள் புதிதாக 17 ஆயிரம் போலீசார் நியமனம் மகளிர் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி கடன் பள்ளி கல்வி துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.750 கோடி 100 நாள் வேலைக்கு தினக்கூலி உயர்வு மெட்ரோ ரயிலுக்கு ரூ.750 கோடி நில வழிகாட்டு மதிப்பு உயர்வு நிறுத்திவைப்பு.

No comments:

Post a Comment