Monday, February 25, 2013

சுயலாப அரசியல் வாதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளே அழிவு யுத்தத்திற்கு காரணம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 25, 2013
இலங்கை::சுயலாப அரசியல் வாதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளே அழிவு யுத்தத்திற்கு காரணமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் (25) ஊர்காவற்துறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தினால் எமது மக்கள் சொல்லொண துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருந்தனர். குறிப்பாக விலைமதிக்க முடியாத உயிரிழப்புக்களையும், உடமை இழப்புக்களையும் இழந்தனர். இதற்கு நடைமுறைச் சாத்தியமாகாத வகையிலான சுயலாப அரசியல் வாதிகளின் கோரிக்கைகளே காரணமென சுட்டிக்காட்டினார்.

இதனிடையே பாடசாலைகளின் ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் நிறைவு செய்யப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன், புதிய கட்டிடத்தின் மேற்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், பாடசாலையின் ஏனைய தேவைகளடங்கிய கோரிக்கைகள் தொடர்பாக திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

முன்பதாக ஊர்காவற்துறை பிரதான வீதியிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் ஏனைய வகுப்பறை தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டன.

இப்புதிய கட்டிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வேண்டுகோளுக்கு அமைய வடமாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பாடசாலை மண்;டபத்தில் கல்லூரி அதிபர் அருட்சகோதரி எலிசபேத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வணபிதா ஜெயக்குமார் அடிகளார், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்.

5.6 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதனூடாக பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்த முடியுமென்பதுடன், இந்நிதி உதவியினைப் பெற்று இப்புதிய கட்டிடத்தை வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதனிடையே அனலைதீவு அருணோதயா முன்பள்ளிக்கு 2012 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து அலுமாரியொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்பள்ளி ஆசிரியரிடம் கையளித்தார்.

இதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக வடமாகாண சபை நிதியுதவியுடன் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 57 மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்ட அதேவேளை, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) 2012 இன் ஊர்காவற்துறை பிரதேச சபையின் கீழான நாராந்தனை மற்றும் புளியங்கூடல் ஆகிய வீதிகளில் பொருத்துவதற்கான வீதி விளக்கு உபகரணத் தொகுதியை அமைச்சர் அவர்கள் ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளர் ம.ஜெயகாந்தனிடம் கையளித்தார்.

இதன்போது பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ, வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment