Friday, January 11, 2013
புதுடில்லி::காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி நிற்கிறது.
கடந்த 8ஆம் தேதி காஷ்மீரில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இராணுவ வீரர்கள் ஹேமராஜ், சுதாகர் சிங் ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த அத்துமீறலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.
இந்த நிலையில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது. இந்தியர்கள் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதைக் உணர்த்தவே தங்கள் கட்சி இன்று போராட்டம் நடத்துவதாக பா.ஜ.கட்சி கூறியுள்ளது.
காட்டுமிராண்டித்தனமாக, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. மக்களின் கோபத்தை தெரியப்படுத்த மாவட்ட அளவில் பாஜக இந்த போராட்டத்தை நடத்துகிறது.
இதுபோன்ற சம்பவங்களின்போது வழக்கம்போல், இந்தியா கண்டனக் குரல்களை எழுப்புவதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய முறையில் பதிலடி தரவேண்டும், என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment