Saturday, January 05, 2013
இலங்கை::நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளரான கபிரியேல் நவுல் 'இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை உத்தியோகஸ்தர் மீதான நெருக்கடிகள் அல்லது தாக்குதல்' பற்றி விசனம் தெரிவித்து எழுதிய கடிதத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதில் அளித்துள்ளார்.
'எனது கடிதத்தில் இது சட்டம் ஒழுங்கு முறைக்கு அமைய கையாளப்பட்டுவரும் உள்விவகாரம் என விளக்கியுள்ளேன். அதில் நான் நடந்தவற்றை விளக்கியுள்ளேன். பிரதம நீதியரசர் மீதான பாரிய குற்றச்சாட்டுக்களை அவரது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கைக்கு அடிப்படையாக அமையாத விடயங்களையும் விளக்கியுள்ளேன்' என அமைச்சர் டெய்லிமிரருக்கு கூறினார்.
'தனது சுதந்திரத்தை வலியுறுத்திய நீதித்துறைக்கு எதிரான தாக்குதலின் உச்சக்கட்டம்தான் பிரதம நீதியரசர் மீதான குற்றவியல் பிரேரணையாகும்' என அறிக்கையாளர் நவுல் 31 டிசெம்பவர் திகதியிடப்பட்ட கடிதத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், 'குற்றவியல் பிரேரணை பற்றி விமர்சிக்கும் எந்த வெளிநாட்டு நிறுவனமும் உணரச்சிவசப்படாது திறந்த மனதுடன் கருத்திலெடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
ஒரு வருடத்தின்முன் பிலிப்பைன்ஸ் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டதையும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நிக்ஸன் மீது கொண்டுவரப்டப்ட குற்றப்பிரேரணையையும் நான் உதாரணமாக காட்டினேன். இவற்றின்போது சட்டவாக்கத்துறையின் பொறுப்பிலேயே பதவி விலகல் முயற்சிகள் விடப்பட்டன என்பதை சுட்டிக் காட்டினேன்' என அவர் கூறினார்.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கூடுதலாக இருந்தமை பற்றிய விமர்சனத்துக்கும் நான் விளக்கமளித்தேன்' இது எந்த ஒரு குழுவின் அமைப்பின்போதும் பின்பற்றப்படும் ஜனநாயக தன்மையில் விளைவு என அமைச்சர' பீரிஸ் தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.
ஐ.நா. மீதான நம்பகத்தன்மையை பேணுவதற்கு தராதரங்கள் ஒரே மாதிரி பிரயோகிக்கப்பட வேண்டும். ஒரே மாதிரியான அளவு கோல்கள் இருக்க வேண்டும். குறித்த நிலைம ஒன்றுக்கொண்டு விசேடமான நியமங்களை ஆக்கிக்கொள்ளக்கூடாது என அவர் டெய்லிமிரருக்கு கூறினார்.
பாராபட்சங்களும், பக்கச்சார்புகளும் ஐ.நா. முறைமையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என அவர் தனது பதில் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment