Saturday, January 12, 2013

இந்தியா - பாக்., எல்லை பகுதியில் பாகிஸ்தான் படைகளை குவிப்பதால் எல்லையில் பதற்றம்!

Saturday, January 12, 2013
ஜம்மு::எல்லை பகுதியில், ராணுவத்தை குவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் வீரர்களின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது. இந்திய ராணுவமும், எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. இதனால், எல்லையில், பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு - காஷ்மீரில், இந்தியா - பாக்., எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும், போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, பாக்., ராணுவம், இந்திய நிலைகள் மீது, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில், 8ம் தேதி, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தனர். கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளையும், காட்டுமிராண்டி தனமாக துண்டித்ததுடன், அதில், ஒரு வீரரின் தலையை, எடுத்தும் சென்று விட்டனர்.பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, இந்திய வெளியுறவு செயலகத்துக்கு வரவழைத்து, கண்டனம் தெரிவித்தது.

இதன் பின்னும், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்கள் மீது, தொடர்ந்து பீரங்கிகளாலும், ராக்கெட்டுகளாலும், தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து, பாக்., ராணுவத்தினர், நேற்றும், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம், தங்கள் வீரர்களுக்கு அளித்த, அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து, அனைவரையும், உடனடியாக பணிக்கு திரும்படி, அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீரில் உள்ள, சாகான்-டா-பாக் என்ற பகுதிக்கும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, ராவால்கோட் என்ற பகுதிக்கும், இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தபடி, பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் போக்குவரத்தையும், பாக்., அரசு, நேற்று அதிரடியாக நிறுத்தி வைத்தது.இதையடுத்து, இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை பகுதியில், இரு ராணுவ வீரர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.

நாட்டு நலன்:

இதுகுறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய வீரர்கள் மீது, பாக்., ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் தான், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது. பாக்., ராணுவத்தின் இந்த நடவடிக்கை, கவலைக்குரியது. காஷ்மீரில், எல்லை பகுதியில், இந்திய வீரர்கள் போதிய அளவில் உள்ளனர்.நாட்டின் நலனை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்துள்ளது. இரு நாட்டு, ராணுவ உயரதிகாரிகள், தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதற்காக காத்திருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. எல்லை பகுதியில் நடக்கும்,

ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது; அதன் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதில், லஷ்கர் அமைப்புக்கு தொடர்புள்ளதா என்ற விவரத்துக்குள், நான் செல்ல விரும்பவில்லை."தலை துண்டித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுடன் பணிபுரிந்த வீரர்கள், தங்களின் சகாக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு, பழி வாங்கும் வரை, சாப்பிடப் போவது இல்லை' என, அறிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி, தற்போது எதையும் கூற விரும்பவில்லை.இவ்வாறு அந்தோணி கூறினார்.

இந்திய தூதருக்கு சம்மன்:

எல்லை பகுதியில், இந்திய வீரர்கள் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில், பாக்., வீரர் ஒருவர் பலியானார். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் சரத் சபர்வாலுக்கு, பாக்., வெளியுறவு அமைச்சகம் சார்பில், நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்திய தூதரிடம், நடந்த சம்பவத்துக்கு, கண்டனம் தெரிவித்தும், விளக்கம் கேட்டும், பாக்., வெளியுறவு அமைச்சகம் சார்பில், நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த, சரத் சபர்வால், ""பாகிஸ்தான் ராணுவத்தினர், அவ்வப்போது, துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், இந்திய படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர்,'' என, தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மதிப்பது இல்லை. அவர்கள், நம்மை எதிரிகளாகத் தான் கருதுகின்றனர். எனவே, போர் நிறுத்த விதிமுறைகளை பின்பற்றாதவரை, பாகிஸ்தானுடன் எந்த பேச்சும் நடத்தக் கூடாது.-யஷ்வந்த் சின்கா,பா.ஜ., மூத்த தலைவர்

No comments:

Post a Comment