Thursday, January 10, 2013
செங்கல்பட்டு::இலங்கை தமிழர்கள் தங்களை திறந்தவேலி முகாமிற்கு மாற்றகோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்தை கடந்த 23-ம்தேதி 23 பேர் தொடங்கினர். அதில் 14 பேர் வாபஸ் பெற்று அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு முகாமிற்கு திரும்பினர். 9 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 18-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் சிங்களவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இந்திய அரசாங்கம் தங்களுக்கு பாபுகாப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ள இலங்கை அகதிகளை நம்முடைய மண்ணில் துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மிகக் கொடுமையான ஒன்று.
தாயே தன்னுடைய குழந்தையை வதைப்பது போன்று இந்திய அரசாங்கம் இலங்கை அகதிகளை நடத்துகின்ற விதத்தை பார்க்கும் போது இதற்கு ஒரு விடிவு காலம் வந்தே ஆகவேண்டும் என்ற உணர்வு இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் இயற்கையாகவே தோன்றுகின்ற ஒன்று.
செங்கல்பட்டில் இருக்கக்கூடிய முகாமில் தேவையற்ற முறையில் சாதாரண வழக்கில் கூட இலங்கை தமிழர்கள் கொண்டு வந்து அடைக்கப்படுவதும் நடந்து வருகிறது. கியூ பிரிவை சேர்ந்தவர்கள் தேவையற்ற முறையில் அகதிகளை கைது செய்வதும் அவர்கள் மீது வழக்குகள் போடுவதும் நிறுத்தப்பட வேண்டும். தவறான முறையில் கைது செய்யப்பட்ட அத்தனை அகதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தோடு சேர்க்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர்கள் தவறு செய்தார்கள் என்று உறுதியாக அரசாங்கம் நம்புகிறது என்று சொன்னால் அதற்கு தகுந்தாற்போன்று நவடிக்கை எடுக்க வேண்டும். துன்புருத்துகின்ற செயலை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோட்ட அமைப்பாளர் நடராஜன், மாவட்ட தலைவர் கே.பி.ராகவன் மவட்ட செயலாளர் பலராமன் நகர தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment