Monday, December 03, 2012
இலங்கை::தாய் நாட்டை நேசித்தமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டமை என்பவற்றுடன், முஸ்லிம்கள் தொடர்பு என்பதாலேயே வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 48 மணித்தியாலங்களுக் குள் புலிகளினால் வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இத்தியாகத்தை செய்த முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் மீண்டும் வாழ்வதற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வவுனியா சாளம்பைக்குளம் அல் அக்ஷா மஹா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் திகழ்வில் சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலூஜ் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தமதுரையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் அமைதியாக தற்போது வாழ்கின்றனர். இந்த சமாதானத்தை பெறுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசும், பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும், முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் தான் இன்று நாம் இங்கு வாழ முடிகின்றது.
புலிகள் இப்பிரதேசத்திலுள்ள அனைத்தையும் அன்று துவம்சம் செய்தனர். வைத்திய சாலையின் கதவுகளை அகற்றியது மட்டுமல்லாமல், பெறுமதியான உபகரணங்களை கொள்ளையிட்டனர். பாடசாலைகளின் கூரைகளை அகற்றினர். பாதைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அழித்து சேதப்படுத்தினர்.
ஆனால் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் புனரமைத்து கொடுக்கவில்லையா, மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான புகையிரதப் பாதை புனரமைப்புக்கள், யாழிலிருந்து சங்குப்பிட்டி பாலம் ஊடாக குறுகிய நேரத்தில் மன்னார் ஊடாக கொழும்புக்குமான நவீன பாதைகள் போன்றவற்றை எமது அரசாங்கமே செய்து வருகின்றது.
இது போன்று எத்தனை வசதிகளை வடக்கில் வாழும் மக்களுக்கு இன, மதம், மொழி, பிரதேசம் கடந்து ஜனாதிபதி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாகம் பெறும் கடன்கள் என்பனவற்றில் 85 சதவீதம் வடக்கிலேயே செலவு செய்யப்படுகின்றது
ஆனால் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் மக்களின் இரத்தத்தை சூடேற்றி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, மீண்டும் ஒருயுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இங்கிலாந்திலும், ஏனைய நாடுகளிலும் கல்வி பயிலுகின்றனர். தேர்தல் ஒன்று வந்துவிட்டால் தமது பிரசன்னத்தை செய்வதுடன், வாரத்திற்கு ஒரு முறை இங்கு வரும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். இவர்களின் இந்த முயற்சிகள் ஒருபோதும் பலனளிக்காது என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய நாம் நடவடிக்கையெடுக்கும் போது, சில சர்வதேச சக்திகள் அழுத்தங்களை கொடுக்கின்றன. மீள்குடியேற்றத்தை தடுக்க பார்க்கின்றனர். இவர்கள் எதை செய்தாலும் இந்த நாட்டிற்காக தம்மை அரப்பணம் செய்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.

No comments:
Post a Comment