Tuesday, December 4, 2012

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க!

Tuesday, December 04, 2012
இலங்கை::யாழ்.பல்கலைக்கழக சூழலிருந்து படையினரையும், பொலிஸாரையும் உடனடியாக விலக்கிக் கொள்வதென யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மகிந்தஹத்துருசிங்க தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்களில் 3பேரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்.பலாலியில் இன்று மாலை யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிகள், துணைவேந்தர் மற்றும் படையினருக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவன் சுதர்சன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாணவர்கள் 3பேரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளவேண்டும் என பல் கலைக்கழக சமுகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொலிஸாரும், படையினரும் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் எனவும், பொலிஸார் மட்டும் பல்கலைக்கழகத்திற்கு அப்பால் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன், அரசியல்வாதிகள், படையினர் போன்றோர் பல்கலைக்கழகத்திற்குள் முன் அனுமதியின்றி உள்நுழைய கூடாதெனவும் படையதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடந்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் மற்றும் பொலிஸார் தேவை கருதி நுழைய வேண்டி இருந்ததே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல. பல்கலைக்கழக துணைவேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவ பீட மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை சுமூகமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவமோ அரசியல்வாதிகளையோ அனுமதிக்க கூடாதென்றும், எந்த காரணம் கொண்டு இராணுவத்தினர் உள்நுழைவது தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.

மாணவர்கள் விரும்பத்தகாத செயல்களை செய்த காரணத்தினால் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மாணவர்களை கைதுசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதியே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில், யாழ். பல்கலைக்கழக உப- துணைவேந்தர் வேல்நம்பி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவபீட பீடாதிபதி, இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment