Tuesday, November 27, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு!

Tuesday, November 27, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள குற்றத்தடுப்புப் பிரிவு முதலாம் மாடிக்கு சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளை எதிர்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது உரிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ப.திகாம்பரத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்து அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் உள்ள நபரொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் திகாம்பரத்திற்கு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது.

வர்த்தகரான பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் முன்னர் தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது நிதி விடயங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் தங்களிடம் இருந்து 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாகவும் வங்கி விசாரணைகளில் இது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தனது மோசடியை ஒப்புக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் அத அதரணவிடம் தெரிவித்தார்.

எனினும் பணமோசடி செய்த குறித்த நபர் வீட்டை பிடுங்க முயற்சிப்பதாக தன்மீது தற்போது முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து தனக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விசாரணை அழைப்பை ஏற்று அதனை எதிர்கொண்டதாகவும் குறித்த நபருக்கு 5 கோடி ரூபா பணம் வந்தது எப்படி என விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியதாகவும் திகாம்பரம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பெயரைக்கூறி அதிகார மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment