Monday, September 03, 2012சென்னை::மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, 26 ஆண்டுகள் பழமையான அண்ணா பவள விழா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் அண்ணா நகர் பவள விழா வளைவும் ஒன்று. அண்ணாவின் பவள விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை மூலம் 1985,1986ம் நிதியாண்டில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 செலவில் இந்த வளைவு அமைக்கப்பட்டது.
இந்த வளைவை 1986 ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். வளைவுகளுக்கு மத்தியில் அண்ணா சிலையும் நிறுவப்பட்டது.
பவள விழா வளைவு ஒவ்வொன்றும் சுமார் 50 அடி அகலமும், 50 அடி உயரமும் உடைய 2 நுழைவாயில்களை கொண்டவையாகும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெரியார் ஈ.வே.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலையையும், அண்ணா நகர் 3வது நிழற்சாலையையும் இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் 117 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இப்பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். புதிய பாலத்திற்கு இடையூறாக உள்ள அண்ணா பவள விழா வளைவு மற்றும் அண்ணாவின் உருவச்சிலையை இடிக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். பவள விழா வளைவை இடிக்க சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கடந்த மே 10ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளைவை இடிக்க 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அண்ணா வளைவு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பகலில் இடித்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இரவு நேரத்தில் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் அண்ணா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது. கோட்ட பொறி யாளர் பன்னீர்செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதலில் அண்ணா சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து வளைவுகள் அறுக்கப்பட்டு, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. வளைவு உறுதியாக கட்டப்பட்டிருந்ததால் அறுக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் அண்ணா வளைவு முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றும், 26 ஆண்டுகள் பழமையானதுமான அண்ணா பவள விழா வளைவு இடிக்கப்படுவதை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்தனர். இடிக்கும் பணி இன்றைக்குள் முழுவதுமாக முடிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேறு இடத்தில் மீண்டும் ஆர்ச்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் உருவச்சிலை நெடுஞ்சாலை துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணி முடிந்த பின்னர் மாநகராட்சியால் சுட்டிக்காட்டப்படும் இடத்தில் நெடுஞ்சாலை துறை செலவில் புதிதாக அண்ணா பவளவிழா வளைவு அமைக்கப்படும். அதன் பின்னர், அந்த இடத்தில் அண்ணாவின் உருவச்சிலையும் நிறுவப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment