Monday, August 27, 2012

இலங்கை தமிழர்களுக்கான அமைதி திட்டம் நிறைவேற்றாமல் போனதில் வைகோவுக்கும் பங்குண்டு: க.அன்பழகன்!

Monday, August 27, 2012
திருப்பூர்::இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்யும் திட்டத்தை தடுத்ததில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நேற்று இரவு நடந்த டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர்கள் வாழ்வுக்காக டெசோ மாநாடு நடத்தப்பட்டது. இங்குள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. இலங்கை தமிழர்களை சிங்களர்கள் வீழ்த்தியதாலும் அமைதி வழிப் போராட்டத்தில் பலன் இல்லாமல் போனதாலும் விடுதலை இயக்கங்கள் தீவிரவாதத்திலும் போரிலும் ஈடுபட்டன.

இலங்கை தமிழர் போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு, சகோதர யுத்தத்தில் ஈடுபடாதீர்கள் என கருணாநிதி கூறினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமைதி வழியில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சென்னையில் இலங்கை போராட்டக் EPRLF குழுத் தலைவரை பிரபாகரனின் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாக ஈழத் தமிழருக்கான பயன் தரும் அமைதித் திட்டம் தடுமாறிப் போனது.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கள்ளத்தோணி மூலமாகச் சென்று பிரபாகரனை சந்தித்தார். இதனால் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான அமைதித் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு.

இலங்கை தமிழர்கள் மனித உரிமை அடிப்படையில் வாழ முடியவில்லை என்று ஐ.நா. சபையின் மனித உரிமை பாதுகாப்புக் குழு இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ளது. இத்தகைய தருணத்தில் ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. டெசோ மாநாட்டு தீர்மானம் ஐ.நா. சபைக்கு எட்டும் என்றார் அன்பழகன்.

No comments:

Post a Comment