Thursday, August 30, 2012

இலங்கை ராணுவத்தினரை வெளியேற்ற கோரி கோவையில் ரயில் மறியல் மதிமுக நிர்வாகிகள் கைது!

Thursday, August 30, 2012
கோவை::குன்னூர் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் ஏராளமானோர் இன்று கைது செய்யப்பட்டனர். நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 3 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வலியுறுத்தி தமிழக கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கோவை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று காலை போத்தனூர் ரயில் நிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பாலக்காட்டில் இருந்து திருச்சி வந்த பயணிகள் விரைவு ரயில் முன்பு அமர்ந்து சுமார் 15 நிமிடத்துக்கு மேல் கோஷமிட்டனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி, மாற்று வழியில் சென்று மதிமுகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் விக்னேஸ்வரன், வெள்ளியங்கிரி, கந்தசாமி, நகர செயலாளர் செல்வராஜ், வெள்ளக்கிணர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருண்குமார் உள்பட 60,க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் 15 நிமிடம் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டு சென்றது. காலை 7 மணியளவில் மதிமுகவின் மற்றொரு தரப்பினர் கோவையில் இருந்து கண்ணணூர் சென்ற ரயிலை போத்தனூரில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment