Friday, August 31, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருபோதும் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது - மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday, August 31, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருபோதும் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிள்ளையார் கோயிலடி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிச்சைக்காரனின் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். அதனை பெருப்பித்து பெருப்பித்து பிச்சைக்காரன் பிச்சை எடுப்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இங்கு அரசியல் செய்து கொண்டு வருகின்றனர்.

நாங்கள் காட்டில் ஆயுதம் தாங்கி போராடிய போது இவர்கள் எங்கிருந்தனர். பல்வேறு நாடுகளில் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, இங்கு வந்து மக்களை குழப்பி கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்காக போராடச் சென்றவன். எனக்கு அவர்களுகுக்கு இருக்கும் உணர்வை விட அதிகமாக உள்ளது. இந்த நாட்டை விட்டுச் சென்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அநான் அவ்வாறு வாழ விரும்பவில்லை. எமது சனம் தொடர்ந்தும் அழிவுகளை சந்தித்து கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே நான் போராட்ட முறையில் இருந்து அரசியல் முறைமைக்குள் பிரவேசித்தேன்.

புலிகளின் தலைவரிடம் இந்த போராட்டத்தை வெல்ல முடியாது பேச்சுவார்த்தையினைக்கொண்டு பெறக்கூடிய அதிகாரத்தை பெற்று அரசியல் தீரியாக உரிமைகளை பெற முயற்சிப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று முதலமைச்சர் நிலையில் இருந்திருப்பார்.

நான் போராட்டத்தின் கொள்கையை மாற்றுமாறு கூறவில்லை. போராட்டத்தின் வடிவவத்தை மாற்றி முயற்சி செய்வோம் என்று கூறினேன்.ஆனால் அவர்கள அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அதில் இருந்து பிரிந்து வந்ததுடன் கிழக்கில் 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளேன்.

இன்று மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு இலங்கையுமே அமைதியாக மாறியுள்ளது. முன்னர் காலையில் எழுந்தவுடன் அழு குரல்களும் சடலங்களையும் நாங்கள் காணுவோம். ஆனால் இந்த நிலைமை இன்றில்லை. அதனை மீண்டும் ஒரு முறை கொண்டு வர நாம் அனுமதிக்கக் கூடாது.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. நாங்கள் இதில் ஒன்றுப்பட்ட சக்தியாக வாக்களிக்க வேண்டும். நாம் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே எமது சமூகத்தினை முன்னெடுத்து செல்ல முடியும். இதனை உணர்ந்த மக்களாக நாங்கள மாற வேண்டும் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment