Tuesday, August 28, 2012சென்னை::திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும் போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர்கதையாக நீடிப்பதைப் பற்றி நேற்றையதினம் நான் கூறும்போது, “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே எடுத்துக்காட்டி, “இருந்தாலும் இந்த ராணுவப் பயிற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் போக்கினை மத்திய அரசு இனியும் நீடிக்காமல், உடனடியாக இலங்கை அரசுடன் இந்தப் பயிற்சி குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் கடுமையாகப் பேசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன். நான் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதலமைச்சரும் மத்திய அரசுக்கு இது குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
இதற்கு முன்பு ஓரிரு முறை இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளித்த போது அது பற்றி கழக ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசிடம் முறையிட்டதும், உடனடியாக அப்படி பயிற்சிக்கு வந்தவர்கள் தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்பப்பட்டார்கள். ஆனால் இப்போது அதற்கு மாறாக மத்திய அரசின் சார்பில், ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு நேற்றையதினம் கூறும்போது, இலங்கை, நமது நட்பு நாடு, எனவே இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்று கூறியிருக்கிறார். இந்தப் பதில் தமிழ்நாட்டையும், தமிழர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு காயப்படுத்துகிறது என்று கருதத்தக்கதாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடை பெற்ற போருக்குப் பின், இலங்கை அரசு இந்தியாவை நட்பு நாடாகக் கருதுவதை விட, சீனாவையும், பாகிஸ்தானையும் தான் நட்பு நாடுகளாகக் கருதிச் செயல்படுகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் பலாலி, காரை நகர், மன்னார், யானை இறவு, தல்லாடி, முல்லைத் தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் இலங்கை அரசின் ராணுவம், விமானப் படை மற்றும் கப்பற் படை தளங்களை அமைத்துள்ளது.
அந்த முகாம்கள் அங்கே அமைக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்கள் அங்கே தங்குவதற்குமான ஏற்பாடுகளையெல்லாம் சீனா தான் செய்து தருகிறது. இது மாத்திரமல்ல; இலங்கைக்கு சீனா 36 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் 14 திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறது. இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் பணி புரிபவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க ஒன்பது கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கூடம் ஒன்றை சீனா கட்டிக் கொடுத்திருக்கிறதாம். சீனாவிடமிருந்து 59 கோடி ரூபாய் செலவில் எம்.ஏ. 60 ரக பயணிகள் விமானம் வாங்கிட இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை சீன நாடு, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் - இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ? இதை ஒரு தலை நட்பு என்று தான் சொல்ல முடியுமே தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான சுமூகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியப் பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு அவர்கள் தெரிவித்துள்ள கருத்தினை மறு பரிசீலனை செய்வதோடு, நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிடவும், மீண்டும் இப்படிப்பட்ட ராணுவ பயிற்சிகள் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே அளிப்பதை உறுதியாகத் தவிர்த்திடவும் வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment