Wednesday, July 4, 2012

வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி பலி!

Wednesday,July 04, 2012
இலங்கை::வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்கள் மூன்று அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது, கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த கைதிகள் தென் பகுதி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட கைதியே உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment