Wednesday, July 4, 2012

அரசியல் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ்!

Wednesday,July 04, 2012
இலங்கை::அரசியல் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றப் பிரச்சினை மற்றும் போருக்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2009 யுத்த நிறைவு காலத்தில் நான் இலங்கைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருந்தனர். ஆனால் அத்தொகை தற்போது குறைந்த ஆயிரமாக மாறியுள்ளது. முன்னாள் புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. கண்ணிவெடி அகற்றல் மற்றுமொரு திருப்தியடையக்கூடிய செயற்பாடு" என அமெரிக்க தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்தம் முடிவடைந்துள்ள போதும் இறுதி போரில் சரணடைந்த பலர் இன்னும் சிறைகளில் இருப்பதாகவும் இலங்கை இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளதாகவும் அதற்கு அமெரிக்கா உதவி செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வழியில் நாம் சில புயல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாம் ஒரு வழியாக வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல் விடயத்தில் நட்பு நாடாக இருந்து அமெரிக்கா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என பெட்ரிசியா புட்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்தும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment