Wednesday, July 4, 2012

செப்டம்பர் முதல் மதுரை-கொழும்பு விமானம்!

Wednesday,July 04, 2012
மதுரை::மதுரையிலிருந்து கொழும்புக்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து மிகின்லங்கா நிறுவனம் விமான சேவையை துவக்கவுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் முதல் சர்வதேச விமானம் இது.

மதுரையிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க, ரூ.130 கோடியில் புதிய டெர்மினல் 2010 செப்., 12ல் திறக்கப்பட்டது. கடந்த பிப்., 24ல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கூட்டத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மிகின்லங்கா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபிலா சந்திரசேனா, மிகின்லங்கா வர்த்தக பிரிவு தலைவர் ரோஷனா பெரேரா, டிரான்ஸ்லங்கா நிர்வாக இயக்குனர் எஸ்.கே.மிட்டல் பங்கேற்றனர். மிகின்லங்கா ஏர்லைன்ஸ் சார்பில் விரைவில் மதுரை-கொழும்பு இடையே விமானம் இயக்கப்படும் என கபிலா சந்திரசேனா அப்போது தெரிவித்தார். அந்த நிறுவனத்திடம் விமானங்கள் இல்லாததால், இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது செப்டம்பர் முதல் வாரத்திற்குள் விமானம் கிடைத்தவுடன், மிகின்லங்கா ஏர்லைன்ஸ், மதுரை-கொழும்பு விமான சேவையை துவக்குகிறது.

தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளதாவது: எம்.பி., மாணிக்தாகூர், முன்னாள் எம்.பி., ராம்பாபு, விமான நிலைய அதிகாரி சங்கையாபாண்டியன் மற்றும் டிராவல் கிளப் நிர்வாகிகளுடன் சங்கம் இணைந்து கொழும்புக்கு விமானத்தை இயக்க வலியுறுத்தி வந்தது. தற்போது மிகின்லங்கா ஏர்லைன்ஸ் சார்பில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மதுரை-கொழும்பு விமானம் இயக்கப்படவுள்ளது. கொழும்புவில் பகல் 2.20க்கு புறப்படும் விமானம் மதுரைக்கு பகல் 3.20க்கு வரும். இங்கிருந்து மாலை 4.15க்கு புறப்பட்டு 5.15க்கு கொழும்பு செல்லும் என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200 பயணிகள் செல்ல வசதியாக ஏ321 ரக விமானம் இயக்கப்படவுள்ளது. தென்தமிழகத்தில் தொழில், பொருளாதாரம், சுற்றுலா, மருத்துவமனைகள், ஓட்டல்கள் வளர்ச்சி பெறும். இரு நாடுகளுக்கு இடையில் தொழில், வர்த்தகத்தை ஊக்குவிக்க, இலங்கையிலுள்ள வணிகர்கள், தொழில் வணிக சங்க நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து பேச முதல் விமானத்தில் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் செல்லவுள்ளனர், என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment