Wednesday, July 18, 2012

ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம் : கோட்டையில் நாளை வாக்குப்பதிவு, பாதுகாப்பை பலப்படுத்த தீவிரம்!

Wednesday,July 18,2012
சென்னை::ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை கோட்டையில் நாளை நடக்கிறது. இதையொட்டி, கோட்டை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., அதிமுக ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போட வசதியாக அந்தந்த மாநில தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் அறை அருகே உள்ள குழுக்கள் அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். டெல்லியில் இருந்து எடுத்து வரப்பட்ட ஓட்டு பெட்டி மற்றும் வாக்குச்சீட்டுகள் சீல் வைக்கப்பட்ட அறையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை பார்வையிட டெல்லியில் இருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர் நிதின் குலாட்டி, இன்று காலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தலைமைச் செயலகத்துக்கு வந்த பார்வையாளர், வாக்குப்பதிவு நடக்கும் இடத்தையும் ஓட்டுப் பெட்டி, வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறையையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அன்பு ஆகியோருடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார். வாக்குப்பதிவையொட்டி தலைமைச் செயலக நுழைவாயில், வெளியேறும் வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்துவது, வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிப்பது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்எல்ஏக்கள் அடையாள அட்டை காட்டிய பிறகே ஓட்டு போட அனுமதிக்கப்படுவர். அங்கு சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் சென்னையில் ஓட்டு போடுகின்றனர். தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுடன் சங்மா ஆலோசனை :கோடநாட்டில் கடந்த 26 நாட்களாக ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடவும் இன்று மதியம் சென்னை வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பி.ஏ.சங்மா சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது குறித்து அவர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்குகிறார். நாளை காலை 10 மணிக்கு கோட்டைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்கிறார். அங்கிருந்து போயஸ் தோட்டம் திரும்பும் அவர், பிற்பகலில் மீண்டும் தனி விமானம் மூலம் கோடநாடு புறப்பட்டு செல்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment