Sunday, July 1, 2012

இலங்கையின் சமாதான செயற்பாடுகள் தொடர்பில் பதிலளிக்க மறுத்த மேனன்!

Sunday, July, 01, 2012
சென்னை::ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் தத்தமது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளதென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே, மேனன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா திருப்தியடைகின்றதா என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் மறுத்துவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் தத்தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பதுடன், அவர்கள் திருப்தியுடன் இருக்க வேண்டுமென்பதையே இந்தியா விரும்புவதாக நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு மேனன் பதிலளித்துள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் தமக்கு விளக்கமளித்துள்ளதாகவும் மேனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது முற்றுமுழுதாக இலங்கையின் கைகளில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகள் மேலும் நெருக்கடியில் ஆழ்த்தும் வகையிலான கருத்துக்களை தாம் தெரிவிக்கப் போவதில்லை எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் நல்லிணக்கமானது முற்றுமுழுதாக இலங்கையின் விவகாரம் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பிலான அனைத்து உதவிகளையும் பங்களிப்பையும் இந்தியா வழங்குவதுடன் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அதிகாரிகள் கடந்த காலங்களில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயங்களில் மேனனுடைய விஜயம் மிகவும் குறுகிய காலப்பகுதியை கொண்டமைந்ததாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.

நல்லிணக்க செயற்பாடுகளின் நிலைமை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் மேனனின் விஜயம் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment