Wednesday, July 4, 2012

ஈராக் மார்க்கெட்களில் பயங்கர குண்டுவெடிப்பு 44 பேர் உடல் சிதறி பலி; 100 பேர் படுகாயம்!

Wednesday,July 04, 2012
பாக்தாத்::ஈராக்கில் உள்ள மார்க்கெட்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 44 பேர் பரிதாபமாக பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து அல்கய்தாவின் சன்னி பிரிவு தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய இமாம்களில் ஒருவரான அல் மஹ்தியின் பிறந்தநாள் விழா, கர்பாலா நகரில் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க, கர்பாலாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் திவானியா நகரில் உள்ள மசூதியில் நேற்று ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மார்க்கெட்டில் காய்கறி லாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 40 பேர் உடல் சிதறி பலியாயினர். 75 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
குண்டுவெடிப்பில் ஏராளமான கடைகள், வாகனங்கள் நாசமாயின. மார்க்கெட் முழுவதும் மனித உடல் பாகங்களும் ரத்தமும் சிதறிக் கிடந்ததாக அப்பகுதியினர் கூறினர். பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு சில மணி நேரம் முன்பு கர்பாலா நகர மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தலைநகர் பாக்தாத்தில் கடந்த மாதம் 13&ம் தேதி ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் பலியாயினர். கடந்த மாதத்தில் ஈராக் முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 237 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 603 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment