Thursday, June 28, 2012

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்பரில்!

Thursday, June 28, 2012
இலங்கை::தற்போது கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதம் முதலாம், எட்டாம் அல்லது பதினைந்தாம் திகதிகளில் அமையும் சனிக்கிழமைகளில் ஒன்றில் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான வேட்புமனுக் கோரலை தேர்தல்கள் செயலகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த மாகாண சபைகளுக்குரிய மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தில் இருந்து ஆரம்பமாகி, ஜூலை மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது.

குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் இறுதித் திகதி வேட்புமனுத் தாக்கலின் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment