Friday, June 29, 2012

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்!

Friday, June, 29, 2012
தர்மபுரி::தர்மபுரியை அடுத்த குண்டல்பட்டியில் தே.மு.தி.க. அவைத்தலைவர் தம்பி. ஜே.சங்கர் மகள் சிந்து-தியாகராஜன் திருமணத்தை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. துணையுடன்தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே தொண்டர்கள் விருப்பத்திற்காகத்தான் நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகூட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசியல்வாதிகள் 15 சதவீத கமிஷன் வாங்கிக் கொண்டு பணிகளை ஓதுக்குவதால் பணிகளை எடுக்க காண்டிராக்டர்கள் முன் வருவது இல்லை.

சேலம் மாநகராட்சியிலும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆட்சியாளர்கள் எந்த வழியில் லஞ்சம் வாங்குகிறார்களோ அதே வழியில் அவர்களைப் பின்பற்றி அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள்.

பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் உள்ளிட்ட கிப்ட் பொருட்களை பள்ளி திறந்தவுடன் வழங்குவோம் என்றனர். ஆனால் பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. 40சதவீத மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இந்த பொருட்களை வழங்கியதாக தகவல்கள் வருகின்றன.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதை அரசு சரியாக பின்பற்றவில்லை. ஒரு மாதத்துக்கு பிறகு இப்போதுதான் கணக்கு எடுத்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும். நாங்கள் மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தோடு இருப்பவர்களை மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம். மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது இல்லை.

கேரளா நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. அங்கு அணை கட்டி நமக்கு வரும் தண்ணீரை தடுக்க முயற்சிக்கிறது. ஆனால் இங்கு உள்ள மணலை கொள்ளையடித்து கேரளாவிற்கு விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்று வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் சரியாக இருந்து இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் வந்து இருக்காது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆட்சியாளர்களே காரணம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நன்றாக ஆட்சி செய்தார். அதனால் அவர் தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது. அதன் பின்னர் யாரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் இளங்கோவன், தர்மபுரி நகர செயலாளர் வெங்கட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment