Saturday, June 30, 2012

தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளை வலிமை வாய்ந்ததாக மாற்றுவோம்: புதுவை விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி!

Saturday, June 30, 2012
புதுச்சேரி::பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை புதுவை வந்தார். பல்கலைகழக வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவரை கவர்னர் இக்பால்சிங், மத்திய மந்திரி நாராயணசாமி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, கண்ணன் எம்.பி., தலைமை செயலாளர் சத்தியவதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

பின்னர் பல்கலைக்கழக வெள்ளி விழா கட்டிடத்தில் உள்ள தெற்காசிய கலாச்சார படிப்பு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

புதுவையில் அமைந்துள்ள இந்த கல்வி மையம் மூலம் தெற்காசிய மக்களுக்கு இடையே கலாசாரம், பண்பாடு, தொடர்பு, புரிதலுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகம் தற்போது சிக்கலான காலத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியை பிராந்திய கூட்டுறவு மூலமாக அந்த நாடுகளின் அறிவார்ந்த தலைவர்கள் தீர்த்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

அந்த விளைவுகள் இந்தியாவுக்கு பல்வேறு படிப்பினையை தந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி நிழல் விழாதவாறு தெற்காசிய நாடுகளுக்குள் ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்க வேண்டும். நம்மிடம் ஏராளமான அறிவார்ந்த மக்கள் உள்ளனர். தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பை நல்ல ஒருங்கிணைந்த வலிமை வாய்ந்த கூட்டமைப்பாக மாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது.

சார்க் மேம்பாட்டு நிதியம் மூலமாக சமூக ரீதியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு, எரிசக்தி, குடிநீர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தெற்காசிய நாடுகளுக்குள் உறுதியான புரிந்துணர்வு அவசியம் ஆகும். தெற்காசிய பல்கலைகழகத்தின் வாளகம் ஒன்று டெல்லியில் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழா முடிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் புதுவை கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை ஜிப்மர் மருத்துவகல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment