Monday, June, 04, 2012இலங்கை::சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலும் கடன்களை பெறும் நடவடிக்கையில் இலங்கை இறங்கியுள்ளது.
உலக வங்கியிடமிருந்து இலங்கை மேலும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இப்படியான கடன்களை பெறுவது, இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததையே வெளிக்காட்டுகிறது என்று கொழும்புப் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றிருந்தாலும், எந்த நோக்கிற்காக அந்தக் கடன்கள் வாங்கப்படுகின்றனவோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே அது செலவிடப்படுகிறதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முன்னர் வாங்கப்பட்ட கடன்களை முறையான முதலீட்டு நடவடிக்கையில் பயன்படுத்தி இருந்தால், தற்போது இப்படியான பெருந்தொகையான கடன்களை மீண்டும் மீண்டும் வாங்க வேண்டிய சூழல் இலங்கைக்கு ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறுகிறார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளை மேம்படுத்தவே இப்போது கடன்கள் பெறப்பட்டாலும், அதற்காக அந்தக் கடன்கள் முழுமையாக, முறையாக பயன்படுத்தப்படுமா என்பதற்கான உத்தரவாதங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே இந்தத் துறைகளுக்கான தேவை அதிகமுள்ளது எனவும், வாங்கப்படும் கடன்கள் அந்தப் பகுதிகளில் குறித்த துறைகளில் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே வடக்கு கிழக்கில் முன்னேற்றத்தைக் காண முடியும் எனவும் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அப்படியில்லாமல் இந்தக் கடன்கள் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் அந்தக் கடனை மீளச் செலுத்துகின்ற போது போரினால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மக்கள் அதில் முக்கிய பங்குதாரியாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கையில் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறப்படும் கடன்களில் பெருமளவு, திட்டங்களை தயாரிப்பதற்கான செலவுகளிலும் இதர இடைச் செலவினங்களிலும் கரைந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment