Saturday, June 23, 2012

அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம்: ஜூலியன் அசாஞ்ச் அச்சம்

Saturday, June 23, 2012
லண்டன்::அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட், இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து, அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள், அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச், மேல் முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, அசாஞ்சை கைது செய்து, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தூதரகத்தை விட்டு வெளியேறும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவார். இதுகுறித்து, அசாஞ்ச் குறிப்பிடுகையில், "ஸ்வீடனுக்கு என்னை நாடு கடத்தினால், அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக, எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment