Friday, June, 22, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் ரியோடி ஜெனைரோ நகரில் நடைபெறுகின்ற ரியோ 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்றும் சில அரச தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இதற்கமைய இந்தியா, நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளின் அரச தலைவர்களைச் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ சந்திப்புக்கு முன்னதாக இந்திய, இலங்கை தலைவர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், இலங்கை இந்திய நட்புறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என உறுதியளித்துள்ளார்.
இந்திய நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதியை சந்தித்த நேபாளத்தின் பிரதமர், தமது நாட்டின் நீர் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுத்தர இலங்கை முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment