Monday, June 18, 2012

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்துள்ள வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 55வது இடத்தில்!

Monday, June 18, 2012
புதுடில்லி::சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை, "டெபாசிட்' செய்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55வது இடத்தில் உள்ளனர். வெளிநாட்டவர்கள், "டெபாசிட்' செய்துள்ள மொத்த பணத்தில், 0.14 சதவீதம் மட்டுமே இந்தியர்களுடையது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவல் விவரம் வருமாறு: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், "டெபாசிட்' செய்துள்ள பணத்தின் அளவு, 2011ம் ஆண்டின் இறுதியில், 90 லட்சம் கோடி ரூபாய் (90 டிரில்லியன்). இதில், இந்தியாவைச் சேர்ந்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின், "டெபாசிட்' 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய். அதாவது, வெளிநாட்டவர்களின் மொத்த, "டெபாசிட்'டில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவங்களின் பங்கு, 0.14 சதவீதம். அதேநேரத்தில், பிரிட்டன் நாட்டவர்களின் பங்கு, 20 சதவீதம். அதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள், 18 சதவீத அளவுக்கு, "டெபாசிட்' செய்துள்ளனர்.

இதற்கு அடுத்த இடங்களில், மேற்கு இந்திய தீவுகள், ஜெர்சி, ஜெர்மனி, பகாமாஸ், கியூவர்ன்சே, லக்சம்பெர்க், பனாமா, பிரான்ஸ், ஹாங்காங், கேமேன் தீவுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு குடியரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சுவிஸ் வங்கிகளில், "டெபாசிட்' செய்துள்ள வெளிநாட்டவர்களில், இந்தியர்கள், 55வது இடத்தில் உள்ளனர். இந்த நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான், 52வது இடத்தில் உள்ளது.இவ்வாறு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment