Tuesday, May 22, 2012

கிழக்கு மாகாணசபை தேர்தலில் நானோ எனது மகனோ போட்டியிடப்போவதில்லை – ஹிஸ்புல்லா!

Tuesday, May, 22, 2012
இலங்கை::கிழக்கு மாகாணசபை தேர்தலில் நானோ எனது மகனோ போட்டியிடப்போவதில்லை என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

றிசாலா எப்.எம். பிராந்திய வானொலியில் பரஸ்பரம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
இந்த பரஸ்பரம் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஊடகவியலாளர் நூர்தீன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா,

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட்ட மாட்டேன். என்னை போட்டியிடுமாறு எனது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் நான் போட்டியிட போவதில்லை. தேசிய அரசியில் உள்ள நான் அதன் மூலமாக நமது சமூகத்திற்கும் இப்பிராந்தியத்திற்கும் பல தரப்பட்ட சேவையை ஆற்றிவருவதுடன் இன்னும் அந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது.

அதே போன்று எனது மகனும் போட்டியிட மாட்டார் எனது மகன் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட கதை வெறும் கட்டுக்கதையாகும்.

அவர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார். எனது குடும்ப வாரிசை அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணம் எனக்கு கிடையாது. அவரும் அந்த எண்ணத்தில் இல்லை என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் தற்போதய உறுப்பினர் கே.எல்.எம்.பரீதை வேட்பாளராக நியமிப்பீர்களா என கேட்டபோது, இன்னும் ஒரு வரையும் யார் வேட்பாளர் என தீர்மானிக்கவில்லை. யாரும் வேட்பாளர் என்று கூறவுமில்லை என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தின் ஒற்றுமையை கருதி எந்த தியாகத்தையும் செய்ய நான் ஆயத்தமாக உள்ளேன் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இதன் போது மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment