Monday, April 30, 2012

திருமுறிகண்டிப் பகுதியில் ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளை!

Monday, April, 30, 2012
இலங்கை::திருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

திருமுறிகண்டிப் பகுதியில் உள்ள சாரியா கிறீம் ஹவுஸ் என்ற கடைக் குள்ளும் அதனோடு இணைந்த வீட்டினுள்ளும் ஏ.கே.47 ரகத்துப்பாக்கிகள் சகிதமாக அத்து மீறி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் துப்பாக்கிகளையும், கத்தியையும் காட்டி மிரட்டி அங்கிருந்த ஏழு வயதுப் பிள்ளையைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு, ஏனையோரை வீட்டு அறைக்குள் அடைத்தனர். பின்னர் வீட்டைச் சல்லடை போட்டுத்தேடுதல் நடத்தி அங்கிருந்த பணம், நகை உட்பட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.

அதன்பின்னர் வீட்டிலுள்ளோரிடம் கிறீம் ஹவுஸ் திறப்பை வாங்கி, அதனைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் போன்றவற்றையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து அதன் பற்றரிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள பிறிதொரு இடமொன்றில் எறிந்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் காவற்துறையினரும், இராணுவத்தினரும் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதலை நடத்தியபோது நடத்தியதுடன் இதுகுறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகளுடன் ஏ9 பிரதான வீதியோரமாகவுள்ள வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையால் அப்பகுதியெங்கும் நேற்றுப் பெரும் பதற்றம் நிலவியது.

No comments:

Post a Comment