Monday, April 30, 2012

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் – பிரிட்டன் விகாராதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

Monday, April, 30, 2012
லண்டன்::இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸடீன், A.அமீன் மற்றும் M. பவ்ஸிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பின் போது கிங்க்ஸ்பரி பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் மற்றும் விகாரை நிர்வாகிகள் SLMDI UK இன் உறுப்பினர்களுக்கும் இடையில் தம்புள்ள பள்ளி உடைப்பு விவகாரம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது SLMDI UK உறுப்பினர்களால் தமது அமைப்பு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள்கள் தொடர்பில் விகாராதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தபட்டது.மேலும் தம்புள்ள பள்ளி உடைப்பு தொடர்பில் உரிய தீர்வினை பெறுவது தொடர்பில் பேசப்பட்டதோடு இலங்கையில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பள்ளி உடைப்பு தொடர்பிலான மகஜர் ஒன்றும் விஹாராதிபதி அவர்களிடம் SLMDI UK உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் அவர்கள் பள்ளி உடைப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்ததோடு இலங்கை வாழ் சிங்கள முஸ்லீம் சமூக இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட யாராக இருப்பினும் அவர்கள் தகுதி பாராது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் மூன்று இனங்களும் தத்தமது மதங்களை பின்பற்றும் உரிமை உண்டு எனவும் இனஇமத பேதங்களுக்கு அப்பால் நாம் இலங்கையர் என்ற ரீதியில் அதன் கல்வி பண்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

அத்துடன் அண்மையில் கிங்க்ஸ்பரி விகாரை மீது மேட்கொள்ளபட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் SLMDI UK யானது தனது கண்டனத்தையும் தெரிவித்தது.

No comments:

Post a Comment