Friday, April 27, 2012

கொத்தணிக் குண்டுகள் என்ற ஆயுதங்களை இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை - இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய!

Friday, April, 27, 2012
இலங்கை::இலங்கையின் வடபகுதியில் கொத்தணிக் குண்டுகள் காணப்பட்டதாக ஐநாவின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐநாவின் நிபுணர் ஒருவர் வெடிக்காத கொத்தணிக் குண்டுகள் இலங்கையில் வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக வெடிக்காத கொத்தணிக்குண்டுகளை தாம் பார்த்ததாக உறுதி செய்யும் ஐநாவின் மின்னஞ்சல் ஒன்றை தாம் பார்த்ததாக அமெரிக்காவின் அசோஸியேட்டட் பிரஸ் செய்தி சேவை கூறியுள்ளது.

இறுதிக்கட்டப் போர் நடந்த கிளிநொச்சிக்கு அருகே உடைந்த இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் வெடிபொருள் ஒன்று வெடித்து கொல்லப்பட்டு, அவனது சகோதரி படுகாயமடைந்த இடத்துக்கு அருகே இந்த கொத்தணிக்குண்டின் துணை வெடிபொருள் காணப்பட்டதாக யூ.என்.டி.பியின் நிலக்கண்ணி நிபுணரான அலன் பொஸ்டன் கூறியதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

கொத்தணிக் குண்டுகள் என்ற வகைக்குள் வரும் எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

புலிகள் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், அப்படியான குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும், ஆனால் தான் அதனை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று ஐநாவிடம் இராணுவம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று 2010 இல் அமலுக்கு வந்தது.

ஆனால், இலங்கை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்படவேறு சில நாடுகள் அதில் கைச்சாத்திடவில்லை.

கொத்தணிக்குண்டுகளை சட்டபூர்வமான ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்கா அவற்றை 1960 இல் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது.

No comments:

Post a Comment