Saturday, March 31, 2012

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய படகு: இலங்கை மீனவர்கள் இருவர் அதிரடி கைது!

Saturday, March, 31, 2012
வேதாரண்யம்::வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை வேதாரண்யம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று மதியம் இரண்டு மணியளவில் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதில், இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் இருந்தனர். இவர்களை வேதாரண்யம் போலீஸார் மற்றும் கடற்கரை போலீஸார், கோடியக்கரை கப்பற்படை முகாம் அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கை பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த அந்தோணிபிள்ளை என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடிக்க வந்துள்ளனர். அதேபகுதியை சேர்ந்த சிவாஜி மகன் சிவாஜி பிரபு (28), பையாராஜா மகன் தயாளன் (18) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் நேற்றுமுன்தினம் மதியம் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க கடலில் கிளம்பியுள்ளனர். அப்போது கடலில் காற்று அதிகமாக வீசியதால் திசைமாறி நேற்று மதியம் கோடியக்கரை கரையில் சேர்ந்துள்ளனர். "படகில் இருந்த எரிபொருள் தீர்ந்ததால் படகை தொடர்ந்து செலுத்த முடியாமல் கோடியக்கரையில் கரை ஒதுங்கநேரிட்டது' என, கைதான இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆபரேஷன் ஹம்லா என்னும் ஒத்திகையை போலீஸாரும், கடலோர பாதுகாப்பு போலீஸாரும், சுங்கத்துறை, கப்பற்படையினருடன் இணைந்து ஈடுபட்டிருந்தனர். கடலில் எந்தப் பொருட்கள் வந்தாலும் விசாரணை நடத்த வேண்டியது சுங்க இலாகாவினரின் பொறுப்பு ஆகும். ஆனால், கோடியக்கரையில் சுங்க இலாகா அதிகாரிகள், சூப்பிரெண்டு உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தும் சுங்கத்துறையினர் இலங்கை மீனவர்கள் குறித்து விசாரணை ஏதும் நடத்த முன்வராதது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் படகு, யமஹா இன்ஜின், மீன் வலை ஆகியவற்றையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் இலங்கை நபர்கள் நடமாடியதால் பாஸ்போர்ட் சட்டப்படி இலங்கை மீனவர்கள் சிவாஜி பிரபு, தயாளன் ஆகிய இருவரையும் வேதாரண்யம் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment