Saturday, March 31, 2012

இலங்கையில் இருந்து, 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தியவர் ,சென்னை விமான நிலையத்தில் கைது!

Saturday, March, 31, 2012
சென்னை::இலங்கையில் இருந்து, 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தியவரை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை, மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரியாஸ்,55. இவர், இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று அதிகாலை சென்னை வந்தார். சுங்கவரி செலுத்தக்கூடிய வகையில், தன்னிடம் எந்த பொருளும் இல்லை எனக் கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள், உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவரது சூட்கேசில், 10க்கும் மேற்பட்ட போட்டோ ஆல்பங்கள் இருந்தன. அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கம்பி வலையங்கள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில், கம்பி வலையங்கள் அனைத்தும், தங்கத்தால் செய்யப்பட்டு, வெள்ளி முலாம் பூசப்பட்டவை எனத் தெரிந்தது.

தொடர்ந்து நடத்திய சோதனையில், சூட்கேசை தள்ளிச் செல்ல உதவும் கைப்பிடி, பெல்ட் பக்கிள்ஸ், கரும் பலகையில் எண்ணிக்கையை குறிக்க வைக்கப்பட்டிருக்கும் மணிகளை பொருத்தும் கம்பிகள் என, அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு, முலாம் பூசப்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 890 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 26 லட்ச ரூபாய். கஸ்டம்ஸ் அதிகாரிகள், முகமது ரியாசை கைது செய்தனர்.

No comments:

Post a Comment