Thursday, March 22, 2012ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
தீர்மானத்தை முறியடிப்பதற்கு போதியளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதனை இலங்கை அரசாங்கம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இதன் காரணமாக ஜனாதிபதி இந்த அவசர பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் ஆதரவினை இழந்தால், இலங்கைக்கு ஆதரவளிக்கும் மேலும் சில நாடுகளின் உதவியை இழக்க நேரிடும் என குறிப்பிடப்படுகிறது...
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது. தீர்மானத்தை வெற்றி பெற செய்ய அமெரிக்காவும், தோற்கடிக்க இலங்கையும் தீவிரமாக களத்தில் குதித்துள்ளன.
இலங்கை போர்குற்ற மனித உரிமைகள் மீதான தீர்மானம் நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டெடுப்புக்கு விடப்படும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. இதில் லிபியா நாடு வாக்களிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே 46 நாடுகளே வாக்களிக்கும். தீர்மானம் வெற்றி பெற 23 நாடுகளின் ஆதரவு தேவை.
தற்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் உள்ளன. இலங்கை அரசின் ஒரு தலை பட்சமான செயல்பாடுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதால் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு அதிகரித்தப்படி உள்ளது. சுமார் 38 நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான், கியூபா உள்பட 7 நாடுகளின் ஆதரவே உள்ளது. இதையடுத்து சில நாடுகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இலங்கை நேற்று ஜெனீவாவில் ஒரு விருந்து நடத்தியது. அந்த விருந்தில் 7 நாடுகளின் தூதர்கள் மட்டுமே கலந்து கொண்டன.
மற்ற எல்லா நாடுகளும் விருந்தை புறக்கணித்து விட்டன. இதனால் இலங்கை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஆதரவாக இருந்த சில நாடுகள் திடீரென எதிர்ப்பு நிலைக்கு மாறி இருப்பதை இலங்கையால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக இந்தியா எதிர்நிலை முடிவை எடுத்ததை தாங்கிக் கொள்ளமுடிய வில்லை.
இந்தியாவின் முடிவை மாற்ற முதலில் இலங்கை வெளியுறவு மந்திரி பீரிஸ், இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேசினார். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அதிபர் மகிந்த ராஜபக்சே நேற்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் போனில் பேசினார். முடிவை எப்படியாவது மாற்றுங்கள் என்று அவர் பேசினார் என தெரிகிறது. இதற்கிடையே மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, ஐ.நா. சபை தீர்மானம் மீது இந்தியா இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறியதாக ஒரு தகவல் வெளியானது.
No comments:
Post a Comment