Saturday, March 31, 2012

ஜெனீவா பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை - ஜீ.எல்.பீரிஸ்!

Saturday, March, 31, 2012
இலங்கை::இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை எனவும், சர்வதேசத்தின் தலையீட்டிற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் எதுவும் மாறப்போவதில்லை எனவும் சில செயற்றிட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவை அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கொள்கைளை மக்களின் ஆணையினைப் பெற்றுள்ள அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டு எந்த செயற்றிட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்பது குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இலங்கையின் செயற்பாடுகளை ஜெனீவாவுக்கு வழங்க நாம் தயாரில்லை. தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற் பாடுகளில் எந்த மாற்றத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதியை நிலைநாட்டு வதற்காக ஸ்தாபிக்கப்பட்டு ள்ள ஐ. நா. மனித உரிமை பேரவை தமது நோக்கங்களுக்கு அப்பால் சென்று அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளிநாடுகளும் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஆறு திருத்தச் சட்டங்கள் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட விசேட தீர்மானம் தொடர்பில் விசேட உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள விவாதத்தின் போது விரிவாக விளக்கமளிக்கப்படும். எனினும் இது தொடர்பில் ஒரு சில கருத்துக்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கின்றேன்.

இலங்கை தொடர்பில் ஐ. நா. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்பட்டது. இது நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்னப்பட்ட பேரவை அல்ல. அர சியல் மயப்படுத்தப்பட்டவை என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

47 நாடுகள் இந்தப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்றது. அவற்றில் 11 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டே இந்த விடயம் தொடர்பில் தமது கடுமை யான செயற்பாடுகளையும், அரசியல் நோக்கத்தையும் வெளிக் காண்பித்தனர்.

ஐ. நா. மனித உரிமை பேரவையானது கள்ளர்கள் நிறைந்த குகையாக மாறியுள்ளது. எனவே அதிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு கொள்கை சபை யின் தலைவி ரோஸ் கெலட் அண்மையில் கருத்து வெளியிட்டதை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அமெரிக்காவை அந்த பேரவையில் இருந்து விலகி நம்பகத் தன்மைக் கொண்ட மாற்றுக் குழுவொன்றை உருவாக்குமாறும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் மனித உரிமை பேரவை தனது கெளரவத்தை இழந்துள்ளதாக ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானத்தை காண்பித்து இலங்கையில் எந்த ஒரு மாற்றத்தை ஏற் படுத்தவோ இலங்கை தொடர்பில் தலையீடு செய்வதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை.

மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பலம் வாய்ந்த அரசு எம் மிடம் உள்ளது. எனவே எமது உள் விவகாரங்களில் உள்ளூர் பிரச்சினை தீர்த்துக் கொள்வதற்கு எமது திறமை உள்ளது.

மக்களின் தேவையை அறிந்தும் இலங்கையின் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் தேவையான தீர்மானத்தை நாம் எடுப்போம்.

சட்ட விதிமுறைகளுக்கு அமைய எந்த விடயத்தை முதலில் அமுல்படுத்துவது படிப்படியாக எதனை அமுல்படுத்துவது என்பதை நாம் அரசாங்கம் என்ற அடிப் படையில் உரிய தீர்மானத்தை எடுப்போம்.

ஜெனீவா தீர்மானத்தை வைத்து எமது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment