Thursday, February 23, 2012

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது!

Thursday, February 23, 2012
நாகர்கோவில்::கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பித்தலையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை பவனி நடத்தப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்த நிகழ்வை சித்தரிக்கும் வகையிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வரும் ஏப்ரல் 8ம் தேதி தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 40 நாள் தவக்காலம் இன்று தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நடந்த திருப்பலியின்போது பங்குதந்தையர்கள் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கினர். தவக்காலம் தொடங்குவதற்கு அடையாளமாக இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது எடுத்துச்செல்லப்பட்ட ஓலைகள் கொண்டு இந்த சாம்பல் தயார் செய்யப்படுகிறது. தவக்காலத்தின் கடைசிவாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படும். புனிதவாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறு திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பாக எருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதைகுட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ஓசன்னா பாடல்கள் பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment