Tuesday, February 14, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறைபாடு - மாரியா ஒட்டோரோ

Tuesday, February 14, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் மாரியா ஒட்டோரோ தெரிவிக்கின்றார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில பிரிவுகள் தொடர்பாக ஆணையாளர் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு, இராணுவ நிருவாக சட்டம், ஊடக சுதந்திரம், காணாமற்போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாகவும் மரியா ஒட்டோரோ தெரிவித்தார்.

இவற்றை செயற்படுத்துவதன் மூலம் உண்மையான நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்த முடியும் எனவும், அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயற்படுத்துவது, மனித உரிமைகள் பொறுப்புடைமை மற்றும் ஜனநாயகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது ஆகிய விடயங்கள் தொடர்பாகவே பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது அவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்களின் தேவையாக உள்ள அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாட்டையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு இரண்டு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் மரியா ஒட்டேரோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment