Tuesday, February 28, 2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அடிப்படை ஆட்சேபனைகள் மீதான உத்தரவு மீண்டும் ஒத்திவைப்பு!

Tuesday, February 28, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹைகோப் வழக்கில் அடிப்படை ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இரண்டாவது தடவையாக இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக மேலும் விளக்கமளிக்க வேண்டியுள்ளதால் மார்ச் மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 1.30 வரை அதனை ஒத்திவைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது பிரதிவாதிகள் சார்பில் அடிப்படை ஆட்சேபனையொன்றை தாக்கல் செய்த சட்டத்தரணி சாலிய பீரீஸ், ஏற்கனவே இதற்கு சமமான குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக மேலுமொரு நீதிமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டுக்கு சமமான குற்றச்சாட்டொன்றை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய சந்தர்ப்பம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த வழக்கு நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினர்கள் சார்பிலும் இதன்போது வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன் பிரதிவாதிகள் சார்பில் இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் குற்றச்சாட்டு மற்றும் சாட்சியங்கள் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

No comments:

Post a Comment