Wednesday, February 29, 2012

அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து மதிநுட்ப சிந்தனையில் மட்டுமே நாம் செயற்பட்டு வருகின்றோம்-டக்ளஸ் தேவானந்தா!

Wednesday,February,29,2012
ஜெனிவா::நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றும், இதன் அப்படையில் நாம் வகுத்திருக்கும் எமது கட்சியின் நடைமுறை சார்ந்த நிகழ்ச்சி நிரலின் படியே இன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் கலந்துகொண்டுள்ளோம்" என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பியின் ஐரோப்பிய உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, தேர்தல் முடிந்தவுடன் அதற்கு மாறான செயற்பாட்டையும் கருத்துக்களையும் மாற்றி செயற்படுபவர்கள் அல்ல.

எந்த வாக்குறுதியினை நாம் எமது மக்களுக்கு வழங்கியிருந்தோமோ, எந்த வழிமுறையில் நாம் செயற்படுவோம் என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தோமே அதையே நாம் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

எமது கனவுகளும், இலட்சியங்களும் தமிழ் பேசும் மக்களை அரசியல் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மண்ணிலே வாழ வைப்பதேயாகும். அதற்காக நாம் வெறுமனே அரசியல் தீர்வு குறித்த எண்ணங்களோடு மட்டும் செயற்படுபவர்கள் அல்ல.

அழிந்து சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் புனித இலட்சியப் பணிகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அபிவிருத்திப் பணிகளை கைவிட்டு அரசியல் தீர்வையோ, அன்றி அரசியல் தீர்வை கைவிட்டு அபிவிருத்திப் பணிகளையோ நாம் ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை. இரண்டுமே இங்கு பிரதானம்.

எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், அபிவிருத்திப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டுமேயானால் தோற்றுப்போன பழைய வழிமுறைக்குள் நாம் மயங்கிக்கிடக்க முடியாது. அல்லது இதுவரை அழிவுகளை தவிர எதையுமே பெற்றுத்தராத வெறும் எதிர்ப்பு அரசியல் என்ற கற்பனைக் கோட்டைக்குள் உறங்கிக் கிடக்கவும் முடியாது.

இதுவரை காலமும் சக தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்து வந்த வழிமுறைகள் யாவும் தோற்றுப்போனாலும், எமது எண்ணங்களில் நாம் நட்டு வளர்த்த இலட்சியப் பயிர்கள் ஒருபோதும் கருகிவிடப்போவதில்லை.

அரசாங்கத்துடன் அர்த்தமற்ற பகமையுணர்வுகளை வளர்ப்பதாலோ, அன்றி இன சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டி விடுவதாலோ நாம் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடைந்து விடமுடியாது. இதுவே இன்றைய யதார்த்தம். எமது அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்களும் இவைகளே.

அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து, எமது மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து மதிநுட்ப சிந்தனையில் மட்டுமே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இணக்க அரசியல் வழிமுறை என்பது யாரும் அவதூறுகளை பொழிவது போல் சரணாகதி அரசியல் அல்ல. யாருடன் பேசி எமது மக்களுக்கான சகல விடயங்களையும் சாதித்து பெற முடியுமோ அவர்களுடனேயே நாம் கைகுலுக்கி நிற்கின்றோம்.

பூட்டிய அறைக்குள் நாங்கள் கைகுலுக்கவில்லை. உலகத்தின் பார்வைக்கு எங்கள் முகங்களை காட்டி வெளிச்சத்தில் நின்றே கைகுலுக்குகின்றோம். நாங்கள் வீரம் பேசவில்லை. விவேகத்தை பயன்படுத்துகின்றோம்.

எங்கள் பாதையில் அழிவுகள் இல்லை. ஆக்கமே இருக்கின்றது. ஆனாலும் தாமதங்கள் உண்டு, மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயும் வெற்றிகள் எமக்கு நிச்சயம்.

இவ்வாறு நாம் யதார்த்தமான உண்மைகளை பேசியே தமிழ்த் தலைவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை நாம் எமது மக்களிடம் இருந்து பெற்றிருந்தோம்.

நாம் எமது மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணக்கமாக பேசியே எமது மக்களின் அரசியலுரிமைக்கான தீர்வு முயற்சியிலும், அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்து பூசவும், இனியொரு அவலம் எமது மண்ணில் நடவாது தடுக்கவும், எமது மக்கள் சுமந்து வந்த இழப்புகளுக்கு ஈடாக அவர்களுக்கு அரசியலுரிமை தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கவுமே நாம் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றோம்.

எமது நல்லெண்ண சமிஞையை எமது மக்களின் சார்பாக அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தவே நான் இன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளவும் வந்திருக்கின்றேன்.

எமது நடைமுறைச் சாத்தியமான இணக்க அரசியல் வழிமுறையின் ஊடாக எமது மக்களை நீடித்த மகிழ்ச்சியோடும் நிரந்தர அரசியல் உரிமையோடும் முகமுயர்த்தி வாழ வைக்கும் எமது உழைப்பின் மீது அவதூறுகளை யார் பொழிந்தாலும் அது குறித்து நாம் அக்கறை செலுத்தப் போவதில்லை" என்றார்.

No comments:

Post a Comment