Tuesday, February 28, 2012

நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நபர் கைது : பல கோடி பறிமுதல் : கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு!

Tuesday, February 28, 2012
நாகர்கோவில்::நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர் போராட் டம் நடந்து வருகிறது.
இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு 3 வெளிநாட்டு என்.ஜி.ஓ.க்கள் மூலம் பண உதவி செய்யப்படுவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இந்நிலையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து, நேற்று காலை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை அவசர, அவசரமாக சென்னைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவரது பெயர் சன்டெக் ரெய்னர் ஹெர்மன் (50) என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தங்கி இருந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது என்.ஜி.ஓ.க்கள் பெயரில் பணம் சப்ளை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. மேலும் அவரது மொபைல் போனை போலீசார் சோதனை செய்த போது, கூடங்குளம் போராட்ட குழுவினரோடு அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. சுற்றுலா விசாவில் ஹெர்மன் இந்தியா வந்துள்ளார். அவரிடம் இருந்த பணம் முழுவதும் கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு வினியோகம் செய்ய இருந்ததா? உளவு பார்க்கும் வேலையில் அவர் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மொபைல் போனில் இருந்த எண்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஹெர்மனின் விசா ரத்து செய்யப்பட்டு நேற்று இரவு அவர் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment