Tuesday, February 28, 2012

கிளிநொச்சி, கோணாவில் பகுதி யூனியன்குளத்தில் ஆதிகாலை வேளையில் கொள்ளை!

Tuesday, February 28, 2012
இலங்கை::கிளிநொச்சி, கோணாவில் பகுதி யூனியன்குளத்தில் நேற்று அதிகாலை ஆயுததாரிகள் பெறுமதிமிக்க நகைகள், பணம் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தி, பொல்லுகளுடன் 4 பேர் கொண்ட கும்பல் கோணாவில் பகுதி யூனியன்குளம் கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர். குறித்த வீட்டின் பெண்கள் கதவைத் திறக்க மறுத்ததை அடுத்து கதவை உடைத்துக்கொண்டு அந்தக் கும்பல் பிரவேசித்துள்ளது.

அந்தப் பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சத்தம் போட வேண்டாம் எனக்கூறி, வீட்டில் இருந்த குறித்த பெண்ணின் தாய், தந்தை இருவரையும் கொள்ளையர் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வீட்டினை சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தி, அங்கிருந்து 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 3 பவுண் நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண் கணவன் இல்லாது தனித்து வாழ்வதுடன் தையல் தொழில் மூலம் வரும் வருமானத்தை வைத்தே அந்தக் குடும்பத்தை நடத்துகின்றார். அரச சார்பற்ற நிறுவனம் அமைத்துக் கொடுத்த தற்காலிக பாதுகாப்பற்ற வீட்டிலேயே குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முதல் கொள்ளைச் சம்பவத்தை முடித்துக்கொண்ட அந்தக் கும்பல் அப்பகுதியில் உள்ள மேலும் மூன்று வீடுகளுக்குச் சென்று துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 6 பவுண் நகைகள் மற்றும் 35 ஆயிரம் பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளது.

முதல் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment