Wednesday,December,28,2011சென்னை : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் ஏதேனும் பிரச்னை திடீரென்று ஏற்பட்டால், அதை சமாளிக்க மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால நடவடிக்கை திட்டத்தை உருவாக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டது.
இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அந்த நிபுணர் குழு அமைக்கும் உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடந்த 20ம் தேதி கடிதம் எழுதினார். ‘உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகார குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளது. மேலும் சில சோதனைகளை நடத்தி வருகிறது.
இக்குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்திலும், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழு முன்பும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது என்று கேட்டுக் கொண்டார். பிரதமரை கடந்த 25ம் தேதி சென்னையில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிலும் முதல்வர் ஜெயலலிதா இதுப்பற்றி எடுத்துக் கூறினார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு உச்ச நீதிமன்றத்துக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில், இந்த குழு அமைக்கப்படுவதை நிறுத்தி வைத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment