Wednesday, December 28, 2011

புலம்பெயர் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களே தீர்வுத் திட்டம் கால தாமதமாவதற்கு காரணம்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday,December,28,2011
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டம் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலைமைக்கு தமிழர்களே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களே தீர்வுத் திட்டம் கால தாமதமாவதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதனால் பரந்து பட்டவர்களினால் யோசனைத் திட்டங்கள் ஏற்றக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான மெய்யான நோக்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான தமது பிரதிநிதிகளை இன்னமும் பெயரிடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவருக்கோ அஞ்சி செயற்படுகின்றார் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார்.

நாங்கள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என அமெரிக்காவிடம் சென்று கூட்டமைப்பினர் முறைப்பாடு செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் காலத்தில் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது, தற்போது புலம்பெயர் தமிழர்களினால் வழிநடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரண்டாம், மூன்றாம் தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினால் புலம்பெயர் சமூகம் வழிநடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட்டு விட்டால் புகலிடம் கோரியுள்ள நாடுகள் அவர்களை மீள இலங்கைக்கு அனுப்பி விடும் என்ற அச்சத்தினால் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்ட தாமதம் குறித்து என் மீது குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை, தமிழ்த் தரப்பினரே தீர்வுத் திட்ட கால தாமதத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுமாறு முதலில் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment