
Friday, December 02, 2011சென்னை : தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி ஏடிஜிபியிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மனு அளித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டை சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர், கடந்த 29-ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது: தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்த எனக்கு சொந்தமான இரண்டரை கிரவுண்ட் நிலத்தில் வீடுகட்டி வாடகைக்கு விட்டிருந்தேன். அதற்கு பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார். என் வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினர். பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் என் வீட்டை பத்திர பதிவு செய்துகொண்டனர். இதற்காக ஐந்தரை கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்தனர். மேலும், அந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டதுபோல ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். தற்போது அந்த வீட்டில் ஸ்டாலின் மகள் செந்தாமரை வசிக்கிறார். கொலை மிரட்டல் விடுத்து, எனது வீட்டை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். புகார் அடிப்படையில் ஸ்டாலின் உள்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து 11.15 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு காரில் சென்றார். அங்கு டிஜிபி இல்லாததால் ஏடிஜிபி ராஜேந்திரனை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘என் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் கொடுத்த மற்றொரு புகாரில், ‘சிறுதாவூர் மற்றும் கோடநாட்டில் நிலஅபகரிப்பு செய்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.
No comments:
Post a Comment