Monday, December 12, 2011

கேரளாவில் திமுக எம்.எல்.எ. கம்பம் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் மீது தாக்குதல்!

Monday, December 12, 2011
போடிநாயக்கனூர்: கேரளத்தவர்களுக்கு எதிரான தாக்குதல் தமிழகத்தில் ஆங்காங்கு தொடர்ந்து கொண்டுள்ளது. போடிநாயக்கனூரில் உள்ள இரண்டு கேரள நிதி நிறுவனங்கள் தாக்கப்பட்டன. அதேபோல கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்கும் தாக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வன்முறை கேரளத்திலும், தமிழகத்திலும் தொடர்ந்து கொண்டுள்ளது.

போடிநாயக்கனூரில் கேரளாவைச் சேர்ந்த முத்தூட் மற்றும் மணப்புரம் ஆகிய இரு நிதி நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்த அலுவலகங்களை சிலர் தாக்கினர். அப்போது அலுவலக விளம்பரப் பலகைகள் சேதமடைந்தன. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

கம்பம் ராமகிருஷ்ணனின் பெட்ரோல் பங்க் மீது தாக்குதல்

இந்த நிலையில், தேனி மாவட்டத்தையொட்டி, தமிழக, கேரள எல்லையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் புளியமலை பகுதியில் இந்த பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் உரிமையாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் முருகேசன் ஆகியோர் ஆவர். முருகேசன், முன்னாள் எம்.பி. நடராஜனின் சகோதரர் ஆவார்.

இந்த பெட்ரோல் பங்குக்குள் நேற்று இரவு புகுந்த சிலர் அங்கிருந்த பம்புகளை தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ.

கம்பம் ராமகிருஷ்ணன் முன்பு மதிமுகவில் இருந்தவர். பின்னர் திமுகவுக்குத் தாவியவர். தற்போது திமுக சார்பில் கம்பம் தொகுதி எம்.எல்ஏவாக உள்ளார்
.

No comments:

Post a Comment