Monday, December 12, 2011புதுடெல்லி : ஒரு நாள் மட்டும் குடிசையில் தங்கி விட்டு பிரதமர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்துள்ளார். லோக்பால் மசோதா தொடர்பாக தனது கோரிக்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்காததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத மேடையில் லோக்பால் குறித்த பொது விவாதமும் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. பாஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்துக்குப்பின் அன்னா ஹசாரே பேசினார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அன்னா கூறியதாவது: ராகுல் காந்தியுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த மோதலும் இல்லை. பிரதமராக வேண்டும் என்ற கனவு அவருக்கு உள்ளது. பிரதமராக ஒரு நாள் மட்டும் குடிசையில் தங்கினால் போதாது. பல மாதங்கள் அவர் குடிசையில் தங்க வேண்டும். கடுமையான லோக்பால் நிறைவேற்றப்படும் என எழுத்து பூர்வமாக பிரதமர் வாக்கு கொடுத்தார். ஆனால் வலுவற்ற மசோதாவுக்கு தான் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் வாக்கு கொடுத்த பின்னர் இப்படி நடக்கிறது என்றால் அதற்கு பின்னால் யார் இருக்கிறார்? ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பிரதமரின் முடிவுக்கு எதிராக செல்லக்கூடிய தைரியம் அவரை தவிர வேறு யாருக்கும் இருக்காது. இவ்வாறு அன்னா கூறினார்.
No comments:
Post a Comment